நேர்கோடானது....

இருபுறமும் நீளும் ஆற்றில்
தொலைதலுக்கு அஞ்சி
குறுக்கே கடந்து
அக்கரை அடைவேன்.

கால்தடங்கள் மட்டுமே
வழிந்தோடும் ஆற்றின்
தூரவெளியில்
எனக்கிணையாய் நகரும் புள்ளிகள்.
ஆற்றின் பரப்பு மிகப்பெரியது!

இரவில்
ஆணி அறைந்ததுபோல்
தூரவெளி நிலைத்துள்ளது.
ஆற்றின் பரப்பு
வெளிச்சம் அளவே.

ஆறு என்பது
மணலூறும் இடமாகவே
என் கற்பிதம்.
ஆற்றின் பயணம்
வலமிருந்து இடமா?
இடமிருந்து வலமா?
பார்த்ததில்லை.

எல்லையற்றுத் தெரியும் ஆற்றில்
எனக்குக் கிடைத்ததென்னவோ
ஒரு நேர்கோடுதான்.
'அக்கரைக்குச் செல்
அலுவல் புரி
திரும்பி வா'

நன்றி: நிலாச்சாரல் ( http://www.nilacharal.com/ocms/log/03221019.asp )

அன்றிலிருந்து....

மாலைப் பொழுதிற்கென்றே
கடைத்தெருவும்
வைகை ஆறும்
எங்களுக்கு வாய்த்திருக்கிறது.
நேரம் வாய்க்காதவர்களுக்கு
திண்ணையாவது.

நெசவுக்கலை
கோவில் திருவிழாக்க‌ள்
நாளித‌ழ் நிக‌ழ்வுக‌ள் என்று
பேசிக்கொள்கிறோம்
சிரித்துக்கொள்கிறோம்
முறைத்துக்கொள்கிறோம்.

பாவு நீட்டிய‌ நாள‌ன்றோ
நோவு கொண்ட‌ நாள‌ன்றோ
இல்லை
தனிமை வேண்டிய‌ நாள‌ன்றோ
நில‌வுட‌ன் க‌தைக‌ள் பேசியவ‌ண்ண‌ம்
திண்ணையிலோ
வைகையிலோ
உறங்க‌வும் செய்கிறோம்.

தாத்தா கால‌த்திலும் இப்ப‌டித்தானாம்
அப்பா சொல்வார்.
இலைக‌ள் துளிர்த்து
வேர்க‌ள் நிலைத்ததான
வாழ்வு எம‌து.

நன்றி: கவிதை வெளியிட்ட கீற்று இணையத்திற்கு.