நேர்கோடானது....

இருபுறமும் நீளும் ஆற்றில்
தொலைதலுக்கு அஞ்சி
குறுக்கே கடந்து
அக்கரை அடைவேன்.

கால்தடங்கள் மட்டுமே
வழிந்தோடும் ஆற்றின்
தூரவெளியில்
எனக்கிணையாய் நகரும் புள்ளிகள்.
ஆற்றின் பரப்பு மிகப்பெரியது!

இரவில்
ஆணி அறைந்ததுபோல்
தூரவெளி நிலைத்துள்ளது.
ஆற்றின் பரப்பு
வெளிச்சம் அளவே.

ஆறு என்பது
மணலூறும் இடமாகவே
என் கற்பிதம்.
ஆற்றின் பயணம்
வலமிருந்து இடமா?
இடமிருந்து வலமா?
பார்த்ததில்லை.

எல்லையற்றுத் தெரியும் ஆற்றில்
எனக்குக் கிடைத்ததென்னவோ
ஒரு நேர்கோடுதான்.
'அக்கரைக்குச் செல்
அலுவல் புரி
திரும்பி வா'

நன்றி: நிலாச்சாரல் ( http://www.nilacharal.com/ocms/log/03221019.asp )

அன்றிலிருந்து....

மாலைப் பொழுதிற்கென்றே
கடைத்தெருவும்
வைகை ஆறும்
எங்களுக்கு வாய்த்திருக்கிறது.
நேரம் வாய்க்காதவர்களுக்கு
திண்ணையாவது.

நெசவுக்கலை
கோவில் திருவிழாக்க‌ள்
நாளித‌ழ் நிக‌ழ்வுக‌ள் என்று
பேசிக்கொள்கிறோம்
சிரித்துக்கொள்கிறோம்
முறைத்துக்கொள்கிறோம்.

பாவு நீட்டிய‌ நாள‌ன்றோ
நோவு கொண்ட‌ நாள‌ன்றோ
இல்லை
தனிமை வேண்டிய‌ நாள‌ன்றோ
நில‌வுட‌ன் க‌தைக‌ள் பேசியவ‌ண்ண‌ம்
திண்ணையிலோ
வைகையிலோ
உறங்க‌வும் செய்கிறோம்.

தாத்தா கால‌த்திலும் இப்ப‌டித்தானாம்
அப்பா சொல்வார்.
இலைக‌ள் துளிர்த்து
வேர்க‌ள் நிலைத்ததான
வாழ்வு எம‌து.

நன்றி: கவிதை வெளியிட்ட கீற்று இணையத்திற்கு.

வேரில் வாழும் ஆசை

வேரினை மண்ணில் மறைத்து
வெளியெங்கும் பரவும்
செடியைப் போன்று
பொறுமையாய் வளர்கிறது எனதாசை.

மழை கொஞ்சும் தருணங்களில்
தன்னை மெருகேற்றிக் கொள்கிறது.
கிளைகள் முறியும் தருணங்களில்
கார்,கூதிர் என்றவாறு தேற்றிக்கொள்கிறது.

எதிர்பாரா ஒரு கணத்தில்
வேரில் வெந்நீர் வீழ்கையில்
காற்றில் விதைகளைத் தூவி
மௌனமாய் மரிக்கிறது.

தொலைந்த பனித்துளி

விடியலுக்குப் பின்பும்
இலையை ஒட்டியே பனித்துளி இருந்தது.

பின்பு கேட்ட
சிறு சலசலப்பிற்க்குப் பின்
பனியும் தொலைந்திருந்தது
இலையும் சிதைந்திருந்தது

குழந்தை ஒன்று அவ்வழியே சென்றிருந்தது;
நீர் பிடிக்க அம்மா அப்பாதையைக் கடந்திருந்தாள்;
வழிப்போக்கன் தடத்தைப் பதிந்திருந்தான்;
எவர் மீதோ கொண்ட கோபம்
எரிச்சலில் இலை மீதாக இருக்கலாம்;
சூரியனும் சுள்ளென்று விடியலில்.

ஏது என்றாலும்
அங்கு நிகழ்ந்திருந்தது
ஒரு நிகழ்வு
ஒரு இழப்பு
ஒரு மாற்றம்.

பகடை விளையாட்டு

நான்
பகடை விளையாட்டிற்குப்
பழக்கப்பட்டவனில்லை;
வலுக்கொண்டு திணிக்கப்படுகின்றேன்.
இல்லை,
வலியச் சென்று ஆடுகின்றேன்.

தோற்றாலும்,
வென்றாலும்
முடிவின்றி தொடர்கிறது
என் பகடை விளையாட்டு.

சில நேரங்களில்
வேடிக்கைப் பார்ப்பவனாக;
சில கணங்களில்
ஆடுபவனாக;
மற்றும் சில பொழுதிலோ
பகடையாகவும் மாறிவிடுகின்றேன்.

பகடை ஆடும் கைகள்
சோர்வடைவதே இல்லை.
எண்கள் மாறி மாறி வருகின்றன;
என் யூகங்கள் தோற்கின்றன.
நான் விளையாட்டின் அடிமை போல் மாறிவிடுகின்றேன்.

ஒவ்வொரு எண்ணிற்கும்
கற்பனை முலாம் பூசப்படுகின்றது.
எண்கள் தமக்குள் சேர்ந்து
எண்ணங்களின் போக்கை மாற்றிவிடுகின்றன.

ஆடிக் களைத்தோ
ஆட்டம் கலைந்தோ
ஆட எவரும் இல்லாத
அன்றைய பொழுதின் உறக்கத்தில்
எண்கள் சிறகு முளைத்தனவாய்
என் தவறுகளை எள்ளி நகைக்கிறது.
என் தூக்கம் கணத்துவிடுகின்றது.

தொடுவானம்

தொடுவானத்தைப் போல நீ!
தூரமும் இல்லை.
பக்கமும் இல்லை.
இரண்டிற்கும் இடையில்
நான் ஏங்கிக் கிடக்கும்
ஒரு புள்ளியில்.

என்றேனும் வருவாய்

உனக்காக
25 முத்தங்களும்
கையளவு பொய்களும்
சேமித்து வைத்திருக்கிறேன்.
என்றேனும் வருவாய்;
ஒரு பார்வை பார்ப்பாய்;
சில வார்த்தை பேசுவாய் என்று.